குமரியில் சாரல் மழை:பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42 அடியை தாண்டியது


குமரியில் சாரல் மழை:பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42 அடியை தாண்டியது
x

குமரியில் சாரல் மழை பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42 அடியை தாண்டியது

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில வாரங்களாக சாரல் மழையாகவும், மிதமான மழையும் பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் சிற்றார், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணை பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்றுமுன்தினம் 20.89 அடியாக இருந்தது. அது நேற்று காலை 21.30 அடியாக உயர்ந்துள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 41.75 அடியாக இருந்த நிலையில், நேற்று அது 42.10 அடியாக உயர்ந்துள்ளது. நேற்றுமுன்தினம் பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 628 கனஅடி தண்ணீர் வந்தது. அது நேற்று வினாடிக்கு 376 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அதேசமயம் நேற்றுமுன்தினம் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,190 கனஅடியாக தண்ணீர் வந்த நிலையில், தற்போது அணைக்கு வினாடிக்கு 832 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 434 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் சிற்றார் 1, சிற்றார் 2 ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.


Next Story