ராகுல்காந்தி வழக்கு: பாஜகவின் மமதைக்கு சுப்ரீம் கோர்ட்டு அணைபோட்டுள்ளது - கே.பாலகிருஷ்ணன்


ராகுல்காந்தி வழக்கு: பாஜகவின் மமதைக்கு சுப்ரீம் கோர்ட்டு அணைபோட்டுள்ளது - கே.பாலகிருஷ்ணன்
x

பாஜக தன்னுடைய அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கட்சிகளை முடக்கும் விதத்தில் ஜனநாயகத்தின் அனைத்து அம்சங்களையும் சீர்குலைக்கிறது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை,

பாஜக தன்னுடைய அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கட்சிகளை முடக்கும் விதத்தில் ஜனநாயகத்தின் அனைத்து அம்சங்களையும் சீர்குலைக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மோசடிப் பேர்வழிகளின் பெயர்களில் மோடி என்ற பெயர் இருப்பதை குறிப்பிட்டு ராகுல் காந்தி பேசியதற்காக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டு அவருக்கு உச்சபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. இதைத் தொடர்ந்து அவசரகதியில் அவருடைய எம்.பி., பதவி பறிக்கப்பட்டது. வசித்துவந்த வீடும் காலி செய்யப்பட்டது.

இந்த தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. பதவியை பறிக்கும் விதத்தில் 2 ஆண்டுகள் உச்சபட்ச தண்டனை வழங்கிட எந்த காரணமும் தீர்ப்பில் சொல்லப்படவில்லை என்றதுடன், பதவியை பறித்ததால் மக்களின் ஜனநாயக உரிமையையும் பாதித்துள்ளது என சுப்ரீம் கோர்ட்டு சரியாகக் சுட்டியுள்ளது.

அதானி - மோடி இடையிலான கள்ளக் கூட்டினை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தி பேசியதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே பாஜக இந்த வழக்கை கையில் எடுத்தது. இவ்வாறுதான் மோடி ஆட்சி தன்னுடைய அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கட்சிகளை முடக்கும் விதத்தில் ஜனநாயகத்தின் அனைத்து அம்சங்களையும் சீர்குலைக்கிறது. ஆனால், அந்த மமதைக்கு சுப்ரீம் கோர்ட்டு அணைபோட்டுள்ளது.

'இந்தியா' இன்னும் வலிமையோடு எழுந்து நின்று, எதேச்சதிகாரக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story