'நிகழ்கால ராஜராஜ சோழன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்' - சட்டசபையில் அமைச்சர் சேகர் பாபு பேச்சு


நிகழ்கால ராஜராஜ சோழன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - சட்டசபையில் அமைச்சர் சேகர் பாபு பேச்சு
x

ராஜராஜ சோழன் காலத்தில் நடைபெற்றது போல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டசபையில் கேள்வி நேரத்தில், நன்னிலம் தொகுதி வாஞ்சிநாதசுவாமி கோவில் குடமுழுக்கு பணிகளை விரைவாக முடிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் கேள்வி எழுப்பினார்.

இதற்கு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல-அமைச்சரின் அறிவுரைப்படி 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 509 கோவில்களில் திருப்பணிகள் செய்வதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 47 கோவில்களில் குடமுழுக்குக்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு 118 கோவில்கள் திருப்பணிகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. நன்னிலம் தொகுதி வாஞ்சிநாதசுவாமி கோவிலில் 21 கோடி ரூபாய் செலவில் 23 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

7 திருக்கோவில்களுக்கு 36 கோடி ரூபாய் செலவில் ராஜகோபுரம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜராஜ சோழன் காலத்தில் நடைபெற்ற திருப்பணிகளுக்கு இணையாக நம்முடைய நிகழ்கால ராஜராஜ சோழன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நடைபெற்று வருகிறது."

இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.



Next Story