பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்காகவா ராமர் கோவில் திறக்கப்படுகிறது? பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் - அமைச்சர் மனோ தங்கராஜ்


பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்காகவா ராமர் கோவில் திறக்கப்படுகிறது? பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் - அமைச்சர் மனோ தங்கராஜ்
x

ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது.

சென்னை,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவை தேர்தல் யுக்தியாக பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. இதனால் ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க முடியாது என பெரும்பாலான எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்காகவா ராமர் கோவில் திறக்கப்படுகிறது? பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

"தர்மசாஸ்திர விதிகளின் அடிப்படையிலோ, பக்தர்களின் நலன்கள் அடிப்படையிலோ, ராமர் கோவில் திறக்கப்படவில்லை என்றால் பாஜக-வின் அரசியல் ஆதாயத்திற்காகவா இப்போது ராமர் கோவில் திறக்கப்படுகிறது? என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதில் சொல்லவேண்டும்.

"ராமரை பற்றி நமக்குச் சொல்லிக் கொடுத்தவை தர்மசாஸ்திரங்களே. அந்த தர்மசாஸ்திரங்களின் விதிகளின் அடிப்படையிலும் ராமர் கோவில் திறக்கப்படவில்லை, பக்தர்களுக்கு நலன் தரும் வகையில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட நிலையிலும் ராமர் கோவில் திறக்கப்படவில்லை. இதனைப் பற்றிக் கேட்டால் மோடி ஆதரவாளர்கள் எங்களை எதிரிகளாகப் பார்க்கின்றனர்" என இந்தியாவின் மிக முக்கிய நான்கு சங்கராச்சாரியார்களும் கூறியுள்ளனர்.

இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அழைக்காத பிரதமர் மோடி இதற்கு என்ன பதில் தர போகிறார்" என்று தெரிவித்து உள்ளார்.


Next Story