சென்னை விமான நிலையத்தில் அரியவகை உயிரினங்கள் பறிமுதல்சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை


சென்னை விமான நிலையத்தில் அரியவகை உயிரினங்கள் பறிமுதல்சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை
x

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட அரியவகை உயிரினங்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. இதையடுத்து, அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கு வந்திறங்கிய சென்னையை சேர்ந்த பயணி மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது உடமைகளில் இருந்த கூடையில் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்க இலாக அதிகாரிகள் அதை திறந்து பாா்த்ததில், அரிய வகை உயிரினங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவற்றில் காடுகளில் வாழும் மலைப்பாம்பு குட்டிகள், நீல நிற உடும்பு, அபூர்வ வகை அணில்கள் உள்பட 50 உயிரினங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதை கொண்டு வந்த பயணியிடம் விசாரித்தபோது, அவை அபூர்வ வகை குட்டிகள் என்றும், இதை வளர்க்க எடுத்து வந்திருப்பதாகவும் கூறினார். ஆனால் விலங்குகளுகளை மருத்துவ பரிசோதனை செய்து விமானத்தில் கொண்டு வந்ததற்கான தடையில்லா சான்றிதழ்கள் உள்பட எந்தவித உரிய ஆவணங்களும் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் அபூர்வ உயிரினங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த அரியவகை உயிரினங்களை மீண்டும் தாய்லாந்து நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக உயிரினங்களை கடத்தி வந்த வாலிபரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


Next Story