ராசிபுரம் அரசு அங்காடியில் ரூ.4.56 கோடிக்கு பட்டுக்கூடுகள் விற்பனை


ராசிபுரம்  அரசு அங்காடியில் ரூ.4.56 கோடிக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
x

ராசிபுரம் அரசு அங்காடியில் ரூ.4 கோடியே 56 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டன.

நாமக்கல்

ராசிபுரம் அரசு அங்காடியில் ரூ.4 கோடியே 56 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டன.

2,459 ஏக்கர்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக பட்டு வளர்ச்சி துறையின் கீழ் ராசிபுரம், வெண்ணந்தூர், திருச்செங்கோடு, பரமத்தி மற்றும் கொல்லிமலை பகுதிகளில் 1,304 விவசாயிகள் 2,459 ஏக்கர் பரப்பளவில் பட்டுப்புழு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மாதந்தோறும் சுமார் 1,000 விவசாயிகள் 50 ஆயிரம் கிலோ பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.

முந்தைய காலத்தில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பட்டுக்கூடுகளை, தங்களின் சொந்த செலவில் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள அரசு பட்டுக்கூடு அங்காடிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டிய நிலை இருந்தது.

பட்டு நூற்பாளர்கள்

ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந் தேதி ராசிபுரத்தில் பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தில் பட்டுக்கூடு ஏல விற்பனை அங்காடியை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார். மேலும் பட்டுக்கூடுகளை கொள்முதல் செய்ய வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பட்டு நூற்பாளர்கள் வந்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 18-ந் தேதி வரை சுமார் ரூ.4 கோடியே 56 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது. இதனை நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 650 பட்டு விவசாயிகள் விற்பனை செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story