சாலை இல்லாததால் பெண்ணின் உடலை டோலியில் சுமந்து சென்ற உறவினர்கள்


சாலை இல்லாததால் பெண்ணின் உடலை டோலியில் சுமந்து சென்ற உறவினர்கள்
x
தினத்தந்தி 24 Jun 2023 6:45 PM GMT (Updated: 25 Jun 2023 5:28 AM GMT)

ஜமுனாமரத்தூரில் உள்ள சீங்காடு மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த பெண்ணின் உடலை டோலி மூலமாக அவரது உறவினர்கள் சுமந்து சென்றனர். சாலை அமைத்து தர மலை கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருவண்ணாமலை

டோலி மூலமாக...

ஜமுனாமரத்தூர் கானமலை ஊராட்சி சீங்காடு கிராமத்தில் வசிப்பவர் ராமராஜ். இவரது மனைவி சுசீலா (வயது 26). கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. பின்னர் அவர் வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சீங்காடு கிராமத்திற்கு கொண்டு வர ஆம்புலன்சில் ஏற்றப்பட்டது.

சீங்காடு கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால் பாதிரிபெருவள்ளி என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து டோலி மூலமாக சுசீலாவின் உடலை சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு மலை பாதையில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சுமந்து சென்றனர்.

இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே கானமலை ஊராட்சிக்கு உட்பட்ட எலந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்த உடல் நல குறைபாட்டினால் உயிரிழந்த சாந்தி என்பவரின் உடலும் எலந்தம்பட்டு கிராமத்திலும் சாலை வசதி இல்லாத காரணத்தால் படவேடு அருகே ஜவ்வாது மலை அடிவாரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு டோலி கட்டி அவரது உறவினர்கள் கொண்டு சென்றனர்.

மலை கிராம மக்கள் கோரிக்கை

இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், கானமலை ஊராட்சியில் உள்ள மலை கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர சிகிச்சை பெற முடியாமல் மலைவாழ் மக்கள் அவதிப்படுகின்றனர். யாருக்காவது உடல் நலம் பாதிக்கப்பட்டால் அவர்களை மலை கிராமங்களில் இருந்து குறிப்பிட்ட பகுதி வரை டோலி அமைத்து தான் கொண்டு வர வேண்டி உள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு ஆம்புலன்சு கூட வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

கானமலை ஊராட்சிக்கு உட்பட்ட மலை கிராம மக்கள் சாலை அமைத்து தர கோரி பல்வேறு அரசு அலுவலங்கங்ளில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. எங்கள் பகுதியை அதிகாரிகளும் நேரில் வந்து பார்வையிடுவதில்லை. எனவே இது குறித்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கானமலை ஊராட்சியில் உள்ள மலை கிராமங்களுக்கு சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story