2023-ம் ஆண்டுக்கான தினசரி அபிஷேக முன்பதிவு தொடங்கியது


2023-ம் ஆண்டுக்கான தினசரி அபிஷேக முன்பதிவு தொடங்கியது
x

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 2023-ம் ஆண்டுக்கான தினசரி அபிஷேக முன்பதிவு நேற்று தொடங்கியது. முதல் நாளில் 154 பக்தர்கள் முன்பதிவு செய்தனர்.

நாமக்கல்

ஆஞ்சநேயர் கோவில்

நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் செதுக்கபட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த ஆஞ்சநேயருக்கு தினசரி காலையில் நடை திறக்கப்பட்டு 9 மணி அளவில் 1,008 வடை மலை சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெறும்.

இதை தொடர்ந்து காலை 10 மணிக்கு மஞ்சள், குங்குமம், நல்ல எண்ணெய், சீயக்காய், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வாசனை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

தினசரி அபிஷேகம்

சாமிக்கு தினசரி அபிஷேகம் மற்றும் வடை மாலை அலங்காரம் கட்டளைதாரர்கள் மூலம் நடத்தப்படுகிறது. அதற்காக ஒரு ஆண்டுக்கு முன்பே பக்தர்கள் முன்பதிவு செய்வது வழக்கம். ஒரு நாள் நடைபெறும் வடை மாலை அலங்காரம் மற்றும் அபிஷேகத்துக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 5 பேர் முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து பூஜையில் கலந்துகொள்ளும் கட்டளைதாரர்களுக்கு அபிஷேக முடிவில் பிரசாதம் வழங்கப்படும்.

அதன்படி வருகிற 2023-ம் ஆண்டுக்கான ஆஞ்சநேயர் சாமி அபிஷேக முன்பதிவு நேற்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று அபிஷேகத்திற்கு முன்பதிவு செய்தனர். முதல் நாளான நேற்று 154 பக்தர்கள் பதிவு செய்து இருப்பதாகவும், சனி, ஞாயிறு மற்றும் விஷேச நாட்களுக்கு அதிக அளவில் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், முழு தொகையையும் செலுத்தினால் மட்டுமே அபிஷேக தேதி முன்பதிவு செய்யப்படும் என்ற அறிவிப்பால் கடந்த ஆண்டைவிட முதல்நாளில் குறைவான முன்பதிவே நடைபெற்று இருப்பதாகவும் கோவில் பணியாளர்கள் தெரிவித்தனர்.

தங்க கவசம்

இதேபோல் ஆஞ்சநேயர் சாமிக்கு தங்க கவசம் அணிவிக்க ரூ.5 ஆயிரம், வெள்ளிக்கவசத்துக்கு ரூ.750, முத்தங்கி அலங்காரத்துக்கு ரூ.3 ஆயிரம், தங்கத்தேருக்கு ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story