கல்குவாரி உரிமையாளரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் ஓய்வுபெற்ற ஆர்.டி.ஓ.வுக்கு 4 ஆண்டுகள் சிறை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு


கல்குவாரி உரிமையாளரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் ஓய்வுபெற்ற ஆர்.டி.ஓ.வுக்கு 4 ஆண்டுகள் சிறை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
x

கல்குவாரி உரிமையாளரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் ஓய்வுபெற்ற முன்னாள் ஆர்.டி.ஓ.வுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

திருவள்ளூர்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த போடி நாயுடு கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. இவர் திருத்தணி அடுத்த கார்த்திகேயபுரம் பகுதியில் அமைந்துள்ள தனது உறவினர் சங்கர் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியை நிர்வகித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு திருத்தணி (வருவாய் கோட்டாட்சியர்)ஆர்.டி.ஓ.வாக இருந்த சந்திரசேகரன் (வயது 68) என்பவர் கல்குவாரிக்கு சென்று அங்கு இருந்த பாபுவிடம் லஞ்சமாக தனக்கு பணம் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் கல்குவாரியை வேறு ஏதாவது காரணம் சொல்லி 'சீல்' வைத்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அப்போதைய திருத்தணி ஆர்.டி.ஓ. சந்திரசேகரன், பாபுவிடம் லஞ்சமாக ஒரு வாஷிங் மெஷின் கேட்டு பெற்றுள்ளார். இந்நிலையில் பாபுவிடம் மேலும் எனக்கு லஞ்சமாக ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

4 ஆண்டுகள் சிறை

இதனால் மனமுடைந்த பாபு காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வம் தலைமையிலான போலீசார் பாபுவிடம் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சந்திரசேகரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இவ்வழக்கு திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு நேற்று நீதிபதி முன்பு வந்தது.

இந்நிலையில் திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி ஆர்.வேலரஸ் சந்திரசேகரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அதைத் தொடர்ந்து சந்திரசேகரனை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story