ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது


ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது
x

ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

திருச்சி:

திருச்சி வயலூர்ரோடு குமரன்நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 70). இவரது மனைவி சாரதா (68). இவர் மதுரையில் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். சாரதா கடந்த 2018-ம் ஆண்டு திருச்சி சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்த இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் கார்த்திகேயன்(46) என்பவரிடம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். 2019-ம் ஆண்டு மேலும், ரூ.6 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக சாரதா தனது கார் மற்றும் வீட்டின் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்துள்ளார். அதன்பிறகு சாரதா கடன் தொகைக்கு அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.18 லட்சம் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் கார்த்திகேயன் கூடுதல் வட்டி சேர்த்து ரூ.35 லட்சம் தர வேண்டும் என்று நிர்பந்தித்ததாக தெரிகிறது. இதனால் சாரதா பணம் தர மறுத்ததால் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சாரதா திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் விசாரணை நடத்தினார். விசாரணையில் கார்த்திகேயன் கந்துவட்டி கேட்டு தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து கந்துவட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.


Next Story