ரெயில் மறியல் குறித்து விமர்சனம்:அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்


ரெயில் மறியல் குறித்து விமர்சனம்:அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்
x

அரசியல் பின்னணி இல்லாத அண்ணாமலை போன்றவர்களுக்கு எனக்குள்ளே எழுந்த உணர்ச்சியை புரிந்து கொள்ள முடியாது. என அவர் கூறினார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரியலூர் மாவட்டம், டி.பழுரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்து கொண்டிருக்கும்போது, ராகுல்காந்தி கைது செய்யப்பட்ட செய்தியை கேட்டவுடனே கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டேன். அந்த நேரத்தில் எனக்குள்ளே உருவான மன எழுச்சியின் அடிப்படையில் உடனடியாக முதல் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்து அங்கே வர இருக்கிற ரெயில் முன் மறியல் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தேன்.

உடனடியாக எதிர்வினையாற்றுவதுதான் எனது நோக்கமாக இருந்ததால் என்னோடு 4 பேர் இருக்கிறார்களா?, 400 பேர் இருக்கிறார்களா? என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அந்த போராட்டம் தொலைக்காட்சிகளில் வெளியாகி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. இதை விமர்சிப்பதற்கு பா.ஜ.க.வினருக்கோ, மற்றவர்களுக்கோ என்ன அவசியம் இருக்கிறது.

அரசியல் பின்னணி இல்லாத அண்ணாமலை போன்றவர்களுக்கு எனக்குள்ளே எழுந்த உணர்ச்சியை புரிந்து கொள்ள முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story