பிளஸ்-1 மாணவியை பெண் கேட்டு ரகளை செய்ததை தட்டிக்கேட்டதால் மூதாட்டியை வெட்டிக்கொன்ற ரவுடி


பிளஸ்-1 மாணவியை பெண் கேட்டு ரகளை செய்ததை தட்டிக்கேட்டதால் மூதாட்டியை வெட்டிக்கொன்ற ரவுடி
x

பிளஸ்-1 மாணவியை பெண் கேட்டு ரகளையில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட மூதாட்டியை வெட்டிக்கொன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ் (வயது 28). ரவுடியான இவர் மீது 12 திருட்டு வழக்குகள் உள்பட 15 வழக்குகள் உள்ளன. கடந்த 6 மாதத்துக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளிவந்து உள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி மீது விக்னேசுக்கு காதல் ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவு போதையில் வந்த விக்னேஷ், அந்த மாணவியின் வீட்டின் எதிரே நின்றபடி, மாணவியை தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி ரகளையில் ஈடுபட்டார்.

அப்போது அருகில் உள்ள ஹேமாவதி என்பவரது வீட்டின் மீது கற்களையும் வீசினார். இதை கண்டித்த ஹேமாவதியை விக்னேஷ் கத்தியை காட்டி மிரட்டி கொண்டு இருந்தார்.

உடனே அங்கு வந்த ஹேமாவதியின் தாய் வெள்ளத்தா (61) என்பவர், விக்னேஷிடம் " ஏன் இப்படி குடித்து விட்டு தகராறு செய்கிறாய்? என தட்டிக்கேட்டார். இதனால் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த விக்னேஷ், கையில் இருந்த பட்டா கத்தியால் மூதாட்டி வெள்ளத்தாவின் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் படுகாயம் அடைந்த வெள்ளத்தா, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளத்தா பரிதாபமாக இறந்தார். ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையிலான போலீசார், வெள்ளத்தா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், வேளச்சேரியில் பதுங்கி இருந்த விக்னேசை கைது செய்தனர்.

அதேபோல் சென்னை பாடி மேம்பாலத்தின் கீழ் தலையில் படுகாயங்களுடன் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில் பிணமாக கிடந்தவர் வில்லிவாக்கம் அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (33) என்பதும், பாடியில் உள்ள தனியார் குடோனில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. நேற்று அதிகாலை அய்யப்பன், பாடி மேம்பாலம் அருகே ஒரு பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்ததாகவும், இதனால் அந்த பெண்ணுடன் இருந்த 3 பேர் அய்யப்பனை அடித்துக்கொலை செய்ததும் தெரிந்தது. அந்த பெண் உள்பட 4 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story