ஹாலோபிளாக் வியாபாரி வீட்டில் ரூ.3½ லட்சம் நகை-பணம் கொள்ளை


ஹாலோபிளாக் வியாபாரி வீட்டில் ரூ.3½ லட்சம் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 4 Nov 2022 6:45 PM GMT (Updated: 4 Nov 2022 6:47 PM GMT)

சங்கராபுரம் அருகே ஹாலோபிளாக் வியாபாரி வீட்டில் புகுந்து ரூ.3½ லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

வியாபாரி

சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் வெங்கடேசன்(வயது 29). இவர் அதே ஊரில் ஹாலோ பிளாக் கல் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வெங்கடேசன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கடந்த 1-ந் தேதி புறப்பட்டு பிற்பகல் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் கதவுகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் ரொக்கம், 6 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி சங்கிலி ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இது பற்றிய தகவல் அறிந்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த வீ்ட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர் ஜெய்சங்கர் பீரோ, கதவுகளில் இருந்த ரேகைகளை பதிவுசெய்தார்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். ஹாலோபிளாக் வியாபாரி வீட்டில் நகை-பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story