ரூ.30 கோடி நிலமோசடி: தாசில்தார்கள், சார் பதிவாளர் கைது - அரசு நிலத்தை வீட்டுமனையாக விற்பனை


ரூ.30 கோடி நிலமோசடி: தாசில்தார்கள், சார் பதிவாளர் கைது - அரசு நிலத்தை வீட்டுமனையாக விற்பனை
x

ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு நிலத்தை வீட்டுமனையாக விற்பனை செய்ததாக ரூ.30 கோடி நிலமோசடி வழக்கில் சார் பதிவாளர், தாசில்தார்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வடகால், பால்நல்லூர் போன்ற கிராமங்களில் அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட 16 ஏக்கர் நிலத்தை கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தினர் வீட்டுமனை பிரிவுகளாக பிரித்து விற்பனை செய்து வந்தனர்.

அந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என்று புகார் எழுந்ததால் காஞ்சீபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மோசடியில் ஈடுபட்ட நிலத்தின் மதிப்பு ரூ.30 கோடி என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரசு நிலத்தை ஏமாற்றி வீட்டுமனை பிரிவுகளாக விற்பனை செய்வதற்கு உடந்தையாக இருந்த காஞ்சீபுரம் இணை சார்பதிவாளர் ராஜதுரை (வயது 40), இந்து சமய அறநிலையத் துறை சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் (54), அலுவலக உதவியாளர் பெனடின் (54), காஞ்சீபுரம் நில எடுப்பு தாசில்தார் எழில் வளவன் (50), ஸ்ரீபெரும்புதூர் ஆதி திராவிடர் நலத்துறை தாசில்தார் பார்த்தசாரதி (33) ஆகியோரை காஞ்சீபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி வரும் 12-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து போலீசார் அவர்களை செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர். நில மோசடி வழக்கில் 5 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story