அரிக்கொம்பன் யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல் அமைச்சர் அறிவிப்பு


அரிக்கொம்பன் யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல் அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 30 May 2023 9:57 AM GMT (Updated: 30 May 2023 10:25 AM GMT)

யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி அளிக்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

அரிக்கொம்பன் யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி அளிக்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குருத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ,

"தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கடந்த 27-5-2023 அன்று இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பால்ராஜ் என்பவர் அரிக்கொம்பன் என்ற காட்டு யானையை எதிர்பாராதவிதமாக பார்த்ததில் அதிர்ச்சியடைந்து கீழே விழுந்து சிகிச்சைக்காக தேனி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்பான சிகிச்சையளிக்கப்பட்ட போதும் அதற்கு பலனின்றி இன்று (30-5-2023) அவர் உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இந்த அரிசிக்கொம்பன் என்ற காட்டு யானையைப் பிடிப்பதற்கு தமிழக அரசின் வனத்துறை அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்கென மூத்த அனுபவம்வாய்ந்த வன அலுவலர்களைக் கொண்ட ஒரு சிறப்புக் குழு திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவர்களைக் கொண்ட ஒரு குழுவும், முதுமலை மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் உள்ளூர் வனப்பகுதியைச் சார்ந்த 16 யானைத்தட கண்காணிப்புக் காவலர்கள் இந்த அரிக்கொம்பன் என்ற காட்டுயானையின் நடமாட்டத்தை கண்காணித்து அந்த யானையை பத்திரமாக வனப் பகுதிக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.

இதற்கென ஒரு தனி கட்டுப்பாட்டு அறையும் கம்பம் வனச் சரக அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, பிறபகுதியினைச் சார்ந்த 200 வனத்துறை அலுவலர்கள் அப்பகுதி மக்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். தேனி மாவட்ட ஆட்சியரும் அங்குள்ள நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்" .


Next Story