திருச்சி விமான நிலையத்தில் ரூ.75 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் ரூ.75 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x

திருச்சி விமான நிலையத்தில் ரூ.75 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பெண்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி

சுங்கத்துறையினர் சோதனை

திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் அதிகளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2.30 மணியளவில் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சிக்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த 2 பெண்களை சுங்கத்துறை அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தங்கள் உள்ளாடையில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது.

1½ கிலோ தங்கம் பறிமுதல்

விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த ஜப்பனீஸ் பானு, பர்வீன் என தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து 1½ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. இதன் மதிப்பு ரூ.75 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையின் முடிவில் இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் அளவு முழுமையாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story