படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை-கலெக்டர் பழனி தகவல்


படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை-கலெக்டர் பழனி தகவல்
x
தினத்தந்தி 19 Oct 2023 6:45 PM GMT (Updated: 19 Oct 2023 6:46 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உதவித்தொகை

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 1.10.2023 அன்று தொடங்கிய காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்படுகின்றன.

இதற்கு 10-ம் வகுப்பு (தோல்வி, தேர்ச்சி) மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவினை தொடர்ந்து புதுப்பித்து 30.9.2023 அன்றைய தேதியில் 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மனுதாரர்கள் 31.12.2022 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சேர்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

மேலும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தோல்விக்கு ரூ.200, தேர்ச்சிக்கு ரூ.300, மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600 மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600, மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1,000 என வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

உதவித்தொகை விண்ணப்பப்படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

அல்லது https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவர். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள் அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி வரை அனைத்து அலுவலக வேலைநாட்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் விழுப்புரத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகத்துடன் நேரில் சமர்பிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story