சாலையில் சண்டைபோட்ட மாடுகள் முட்டியதில் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவி பலி - பெற்றோர் கண் எதிரே பரிதாபம்


சாலையில் சண்டைபோட்ட மாடுகள் முட்டியதில் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவி பலி - பெற்றோர் கண் எதிரே பரிதாபம்
x

சாலையில் சண்டை போட்ட மாடுகள் முட்டியதில் ஆட்டோ கவிழ்ந்தது.இதில் பெற்றோர் கண் எதிரேயே பள்ளி மாணவி பலியானார்.

சென்னை

சென்னை சேத்துப்பட்டு ராஜம்மாள் தெருவைச் சேர்ந்தவர் சார்லஸ் (வயது 50). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி மேரி சைலா (45). இவர்களுடைய மகள் ரூத் சோபியா (13). இவர், அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு பகுதியில் உள்ள மாமியார் வீட்டுக்கு சார்லஸ் குடும்பத்துடன் ஆட்டோவில் சென்றார். பின்னர் மாலையில் சென்னைக்கு திரும்பி வந்தார்.

திருவள்ளூர் அடுத்த தொழுவூர் பகுதியில் சி.டி.எச்.சாலையில் வரும்போது சாலையில் 2 மாடுகள் சண்டை போட்டுக்கொண்டே வந்து இவர்களது ஆட்டோ மீது முட்டின. இதில் நிலை தடுமாறிய ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது.

இதில் ஆட்டோவில் வந்த சார்லஸ் உள்பட 3 பேருக்கும் தலை, முகம் உள்பட உடலின் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி ரூத் சோபியா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

தலையில் படுகாயம் அடைந்த சார்லஸ் மற்றும் அவருடைய மனைவி மேரி சைலா இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெற்றோர் கண் எதிரேயே பள்ளி மாணவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story