ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு


ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு
x

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

திருச்சி

சமயபுரம்:

பள்ளி மாணவர்

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள கொணலை ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் வீரமணி. இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன்கள் பெரியசாமி, சூர்யா(வயது 11). இதில் சூர்யா கொணலையில் உள்ள மலைமாதா பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் கபடி விளையாட செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. மாலை நேரத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் கொணலையில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றனர். அப்போது ஏரிக்குள் ஒருவரின் கால் தென்பட்டதாக கூறப்படுகிறது.

ஏரியில் பிணம்

இதைத்தொடர்ந்து அவர்கள் ஏரியில் இறங்கி பார்த்தபோது சூர்யா பிணமாக கிடந்தது தெரியவந்தது. இது பற்றி அவர்கள் சூர்யாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் பதறியடித்து வந்த அவர்கள், சூர்யாவின் உடலை கண்டு கதறி அழுதனர். பின்னர் சூர்யாவின் உடலை வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சூர்யாவின் வீட்டிற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ஏரியில் சூர்யா குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story