திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
x

திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

திருக்குறள் முற்றோதல் போட்டி

உலக பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு, கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் "திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு திட்டம்" நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் ரொக்க பரிசாக தமிழ் வளர்ச்சி துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

2023-24-ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் 1,330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறன் கொண்ட மாணவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், குறள் எண், போன்றவற்றை தெரிவித்தால் அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள், சிறப்பு பெயர்கள் போன்றவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

நவம்பர் 30-ந்தேதிக்குள்...

அரியலூர் மாவட்டத்தில் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளான இருப்பின் இப்போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்த போட்டியில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் இந்த போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது. போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பம் பெறலாம். https://www.tamilvalarchithurai.tn.gov.in/ என்ற தமிழ் வளர்ச்சி துறையின் வலைதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொண்டு அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி மாலைக்குள் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் 04329-228188 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர்க ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story