காருக்குள் இறந்த நிலையில் கிடந்த பள்ளி ஆசிரியர் - போலீசார் விசாரணை


காருக்குள் இறந்த நிலையில் கிடந்த பள்ளி ஆசிரியர் - போலீசார் விசாரணை
x

ஊட்டி அருகே காருக்குள் இறந்த நிலையில் கிடந்த பள்ளி ஆசிரியரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்


நீலகிரி மாவட்டம், காட்டேரி கிராமம் தூரட்டி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் ரஞ்சித் (வயது 40). இவர் கூடலூரில் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரம்யா (35). இவர்களுக்கு பிரதிக்க்ஷா (13) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி கோவை சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து ரஞ்சித் காரில் சென்றுள்ளார். ஆனால் மீண்டும் வீட்டுக்கு அவர் திரும்பி வரவில்லை.

இந்நிலையில் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் இன்று காலை நடைபயிற்சி சென்ற சிலர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்டு சந்தேகம் அடைந்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலையடுத்து மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர்.

அப்போது காரினுள் இறந்த நிலையில் ஆண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த ஆண் இறந்து இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்பதால் மிகவும் அழுகிய நிலையில் உடல் காணப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் காரினுள் இருந்தது ரஞ்சித் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .

மேலும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story