மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறப்பு


மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறப்பு
x

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களும் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நகரின் பல்வேறு பகுதிகளில் தற்போதுவரை வெள்ளம் வடியவில்லை. மேலும் பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் பாதிக்கப்பட்டன. இந்த பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடியை பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கியது.

இந்த நிலையில் மழை பாதிப்பு காரணமாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த 4-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களும் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

எனவே மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் 11-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 7 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின்னர் நாளை சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. எனவே பள்ளிகளின் சீரமைப்பை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story