மாநகர பஸ்களில் இலவச பயணம் செய்வதற்கான டோக்கன் பெற மூத்த குடிமக்கள் ஆர்வம் - சென்னையில் 40 மையங்களில் வழங்கப்பட்டன


மாநகர பஸ்களில் இலவச பயணம் செய்வதற்கான டோக்கன் பெற மூத்த குடிமக்கள் ஆர்வம் - சென்னையில் 40 மையங்களில் வழங்கப்பட்டன
x

மாநகர் போக்குவரத்துக் கழகப் பஸ்களில் இலவச பயணம் செய்வதற்கான டோக்கன்கள் 40 மையங்களில் நேற்று முதல் வழங்கும் பணி தொடங்கியது. மூத்த குடிமக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.

சென்னை

மாநகர் போக்குவரத்துக் கழகப் பஸ்களில், 60 வயதிற்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில், இலவச பஸ் பயண டோக்கன்கள் நேற்று முதல் வழங்கப்பட்டது. அடுத்த அரையாண்டிற்கு, ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு இலவச பஸ் பயண டோக்கன்கள் மற்றும் பயண அட்டைகள் 40 மையங்களில் வழங்கப்பட்டன.

இலவச பயண அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை புதியதாக பெறுவதற்காக இருப்பிட சான்றாக ரேஷன் கார்டு நகல், வயது சான்றாக ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டையின் நகல், 2 கலர் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களை கொண்டு வந்தனர். இவற்றை, போக்குவரத்து கழக ஊழியர்கள் அசல் சான்றிதழுடன் ஒப்பிட்டு சரி பார்த்தனர். புதுப்பிப்பவர்கள் தங்களது முந்தைய இலவச பயண அடையாள அட்டையை மட்டும் கொண்டு வந்து புதுப்பித்து சென்றனர்.


குறிப்பாக அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், மந்தைவெளி, தியாகராயநகர், சைதாப்பேட்டை, சென்ட்ரல் பஸ் நிலையம், பாரிமுனை, குரோம்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி, அய்யப்பன் தாங்கல், வடபழனி, கே.கே.நகர், ஆதம்பாக்கம், வேளச்சேரி, அண்ணாநகர், கோயம்பேடு, அம்பத்தூர், ஆவடி, அயனாவரம், வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, எண்ணூர், வியாசர்பாடி, எம்.கே.பி. நகர், மாதவரம், பாடியநல்லூர், செங்குன்றம், தாம்பரம், மெப்ஸ் பஸ் நிலையம், பூந்தமல்லி, பெரம்பூர் பேசின்பாலம், வள்ளலார் நகர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் உள்ள பஸ் நிலையங்களில் டோக்கன் வாங்க அதிக எண்ணிக்கையில் மூத்த குடிமக்கள் ஆர்வமாக வந்து இருந்தனர்.

இந்த டோக்கன் வருகிற ஜூலை 31-ந்தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படுகிறது. அதன் பின்னர், வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி முதல் அந்தந்த பணிமனைகளின் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்.


Next Story