அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜனவரி 22-ம் தேதி வரை நீதிமன்ற காவல்


அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜனவரி 22-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 11 Jan 2024 1:22 PM IST (Updated: 11 Jan 2024 4:37 PM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 15வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த 2023 ஜூன் 14ல் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அவரது ஜாமீன் மனு முதன்மை அமர்வு நீதிமன்றம், ஐகோர்ட்டு ஆகியவற்றால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் மருத்துவ காரணங்களின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்ததை அடுத்து, அந்த மனு வாபஸ் பெறப்பட்டது. ஜாமீன் கோரி மீண்டும் அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என அறிவுறுத்தி இருந்தது. நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், கடந்த ஜனவரி 4-ம் தேதி 14வது முறையாக செந்நில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டு இன்றைக்கு (ஜனவரி 11ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக காணொலிக் காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 22ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வரும் 22-ம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட உள்ளது.

இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story