பணியிடங்களில் பாலியல் தொந்தரவு; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


பணியிடங்களில் பாலியல் தொந்தரவு; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x

பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களில் புகார் குழு அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடக் கோரி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டப்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளூர் புகார் குழுக்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் அமல்படுத்தப்படுவதை மாநில அரசு கட்டாயமாக கண்காணிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், பதிவான புகார்கள், தீர்க்கப்பட்ட வழக்குகளின் விவரங்கள் குறித்த பதிவேட்டை பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.



Next Story