பாலியல் புகார்: தலைமறைவாக இருந்த தனியார் பள்ளி தாளாளர் கைது


பாலியல் புகார்: தலைமறைவாக இருந்த தனியார் பள்ளி தாளாளர் கைது
x
தினத்தந்தி 25 Nov 2022 1:11 AM GMT (Updated: 25 Nov 2022 1:12 AM GMT)

திருநின்றவூர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்த தாளாளர் வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியின் தாளாளர் வினோத் (வயது 34). இவர், அந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் மாணவ-மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்து தங்களது பெற்றோருடன் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பள்ளி தாளாளர் வினோத் மீது 4 பிரிவுகளின் கீழ் திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் அந்த பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநின்றவூர் போலீசார், பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர் வினோத் பூச்சி மருந்து அருந்திய படி கதறி அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர், "நான் எந்த தவறும் செய்யவில்லை. இது மாணவ-மாணவிகளுக்கு தெரியும்" என்று கூறினார்.

இந்த நிலையில், பாலியல் தொல்லை புகாரில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் வினோத்தை போலீசார் கைது செய்துள்ளனர். கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story