பா.ஜனதா எதிர்ப்பு ஓட்டுகளை இந்திய கம்யூனிஸ்டு பிளவுபடுத்துவதாக சசி தரூர் புகார்: டி ராஜா கண்டனம்


பா.ஜனதா எதிர்ப்பு ஓட்டுகளை இந்திய கம்யூனிஸ்டு பிளவுபடுத்துவதாக சசி தரூர் புகார்: டி ராஜா கண்டனம்
x
தினத்தந்தி 19 March 2024 8:56 PM GMT (Updated: 19 March 2024 10:06 PM GMT)

சசிதரூர் போட்டியிடும் திருவனந்தபுரம் தொகுதியில் அவருக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை நிறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

கேரளாவில், 'இந்தியா' கூட்டணி கட்சிகளான காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சிகளும் எதிர் எதிராக போட்டியிடுகின்றன. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுவதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா விமர்சித்து இருந்தார்.

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் போட்டியிடும் திருவனந்தபுரம் தொகுதியில் அவருக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை நிறுத்தி உள்ளது.

இதுகுறித்து சசிதரூர் தனது வலைத்தள பக்கத்தில், "வயநாட்டில் ராகுல்காந்தி நிற்பதை விமர்சித்த அதே இந்திய கம்யூனிஸ்டு கட்சிதான், திருவனந்தபுரம் தொகுதியில் பா.ஜனதாவின் தாளத்துக்கு ஏற்ப ஆடுகிறது. எனக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரசாரம் செய்வது, பா.ஜனதா எதிர்ப்பு ஓட்டுகள் பிளவுபடுவதற்குத்தான் வழிவகுக்கும். அவர்கள்தான் வயநாட்டில் கூட்டணி தர்மத்தை போதிக்கிறார்கள்" என்று அவர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் சசிதரூர் தெரிவித்த கருத்துக்கு டி.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "இந்த அறிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் (சசி தரூர்) தன்னை நன்கு படித்தவர் என்று நினைக்கிறார், ஆனால் அவர் கேரளா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றை முதலில் அறிந்திருக்க வேண்டும்" என்று கூறினார்.


Next Story