திருத்தணி அருகே ஸ்டூடியோ கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு


திருத்தணி அருகே ஸ்டூடியோ கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு
x

திருத்தணி அருகே ஸ்டூடியோ கடைக்காரரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர்

ஸ்டூடியோ கடைக்காரர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி இந்திராநகர் பகுதியில் வசிப்பவர் வினோத்குமார் (வயது 38). இவர் அதே பகுதியில் ஸ்டுடியோ கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு இந்திராநகர் சாலை சந்திப்பின் அருகே வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வினோத்குமாரை அதே பகுதியைச் சேர்ந்த பகிரதன் (24), திருத்தணி சித்தூர் சாலையைச் சேர்ந்த சாய்கல்யாண் (24) ஆகிய இருவரும் வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றனர்.

அரிவாள் வெட்டு

அவர்களிடமிருந்து தப்பித்து கடைக்குள் ஓடிய வினோத்குமாரை விடாமல் துரத்திச் சென்று அவர்கள் தலையில் அரிவாளால் பலமாக வெட்டினர். வலியால் அவர் சத்தம் போட்டதால் அக்கம்பக்கத்தினர் கடை அருகே வந்தனர். உடனே இருவரும் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திருத்தணி போலீசார் படுகாயம் அடைந்த வினோத்குமாரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

இதில் அதை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (38) என்பவருக்கும் வினோத் குமாருக்கும் இடையே கடந்த மாதம் தகராறு ஏற்பட்டள்ளது. எனவே வினோத்குமார் பிரகாஷ் மீது திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுபற்றி பிரகாஷ் தனது அக்கா மகன் பகிரதனிடம் கூறியதையடுத்து தனது மாமா பிரகாஷ் மீது புகார் கொடுத்த வினோத்குமாரை பகிரதன் தனது நண்பர் சாய் கல்யாணுடன் சேர்ந்து கத்தியால் வெட்டியது தெரிந்தது.

இதையடுத்து தப்பியோடிய பகிரதன், சாய்கல்யாண் மற்றும் பிரகாஷ் ஆகிய 3 பேரையும் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.


Next Story