ரூ.3,233 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்து - சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


ரூ.3,233 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்து - சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 31 May 2023 5:18 PM GMT (Updated: 31 May 2023 5:42 PM GMT)

பல்வேறு நிறுவனங்களுடன் ரூ.3,233 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளின் 9 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வந்தடைந்தார். முன்னதாக முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளிக்க திமுகவினர் பெரும்பாலானோர் திரண்டிருந்தனர். பின்னர் சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமைந்தது. தமிழ்நாட்டுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான பொருளாதாரம் மேம்பாடு அடையும் வகையில் பயணம் அமைந்தது. புதிய முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூரிலும், ஜப்பானிலும் அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்துத்துள்ளேன். தமிழகத்தில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அவர்களை அழைத்துள்ளேன் . உலக முதலீட்டாளர் மாநாட்டை தமிழக அரசு வெற்றிகரமாக நடத்த உள்ளது.

தமிழ்நாடு தொழிற்துறையில் முதல் இடம் பிடிப்பதே அரசின் எண்ணம். ரூ.3,000 கோடி முதலீடு ஈர்க்க திட்டமிட்டோம்; ஆனால் ரூ.3,233 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

செங்கோலை பிரதமர் வாங்கிய அன்றே அது வளைந்து விட்டது. மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதே செங்கோல் வளைந்ததற்கு சாட்சி" என்று அவர் தெரிவித்தார்.


Next Story