சிப்காட் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சிப்காட் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2023 7:00 PM GMT (Updated: 13 Jun 2023 9:55 AM GMT)

சிப்காட் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நாமக்கல்

வளையப்பட்டி பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிப்காட் தொழிற்பேட்டை

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசின் சார்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான நிலங்களை அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளிடம் கருத்து கேட்காமல், சிப்காட் அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து சிப்காட் எதிர்ப்புக்குழு அமைத்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக நேற்று சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கீழ் செயல்படும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சிவகுமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், லோகநாதன், ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் குணசேகரன், பொது செயலாளர் மாசிலாமணி, கொ.ம.தே.க. தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், ஒருங்கிணைந்த மாவட்ட விவசாயி அணி செயலாளர் ரவிச்சந்திரன், மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் விவசாய முன்னேற்ற கழக நிர்வாகிகள் பேசினர்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், விவசாய சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டு, வளையப்பட்டி பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடவேண்டும். நாமக்கல் நகராட்சி கழிவுநீர் தூசூர் வழியாக சென்று காவிரியில் கலப்பதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மாவட்ட கலெக்டர் உமாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.


Related Tags :
Next Story