உடுமலை அருகே கனிம வளங்கள் கொள்ளை சம்பவத்தை தடுக்க வேண்டும்


உடுமலை அருகே கனிம வளங்கள் கொள்ளை சம்பவத்தை தடுக்க  வேண்டும்
x

உடுமலை அருகே அமராவதி பகுதியில் நடந்து வரும் கனிம வளங்கள் கொள்ளை சம்பவத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

திருப்பூர்


உடுமலை அருகே அமராவதி பகுதியில் நடந்து வரும் கனிம வளங்கள் கொள்ளை சம்பவத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

இயற்கையை காப்பது அவசியம்

இயற்கை தன்னலம் கருதாது செயல்பட்டு வருகிறது. ஆனால் இயற்கைக்கு கேடு விளைவிக்கும் வகையில் சுயநல நோக்கோடு செயல்படும் சிலர் மரங்களை வெட்டுதல், மண்வளத்தை மாசுபடுத்துதல், சுற்றுப்புற சுகாதாரத்திற்கு கேடு விளைவித்தல், மழை பொழிவுக்கும் நிலத்தடி நீர் இருப்புக்கும் ஆதாரமாக உள்ள கனிம வளங்களை கொள்ளையடித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால் இயற்கையின் தன்மை பாதிக்கப்பட்டு பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

அதை நிரூபிக்கும் விதமாக உடுமலையை அடுத்த அமராவதி போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியில் தம்புரான் கோவில் அருகே அனுமதியின்றி மலைகளை வெடிவைத்து தகர்த்து கற்கள் உற்பத்தி செய்தும் கிராவல் மண்ணை அள்ளிச் செல்லும் சம்பவமும் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

இயற்கையால் பூமியில் படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் பேணிக்காத்து பராமரித்து அடுத்த தலைமுறைக்கு சேதாரம் இல்லாமல் கொண்டு சேர்ப்பது அனைவரின் கடமையாகும். இதில் அரசு அதிகாரிகளின் பங்கு அதிக அளவில் உள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் ரோந்து மற்றும் ஆய்வு மேற்கொண்டு கனிம வளங்களை பாதுகாக்க வேண்டியது தலையாய கடமையாகும்.

ஆனால் உடுமலையை அடுத்த அமராவதி பகுதியில் நிலைமை தலைகீழாக உள்ளது. கடந்த சில நாட்களாக தாழ்வான பகுதியில் அரசு புறம்போக்கில் உள்ள மலைகளை வெடிவைத்து தகர்த்து சைஸ், சிறுகல் மற்றும் வேலி போடுவதற்கு பயன்படும் கம்பிகற்களை உற்பத்தி செய்து கடத்திச்சென்ற வண்ணம் உள்ளனர். அதே போன்று நிலத்தடி நீர் இருப்புக்கு ஆதாரமாக உள்ள கிராவல் மண் கடத்தலும் அதிகரித்து வருகிறது.

கனிமவள கொள்ளை

இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் இயற்கையால் படைக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத அரியவகை சிறு உயிரினங்கள் வாழ்வாதாரத்தை இழந்தும் அழிந்தும் வருகின்றன. முறையான அனுமதி பெறாமல் முறைகேடான வழியில் நடைபெற்று வரும் தொடர் கனிமவள கொள்ளையால் தட்பவெப்ப நிலை மாற்றமும் ஏற்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளது. இது சம்மந்தமாக புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக புகார் அளிப்பவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கனிமவளம், வருவாய் மற்றும் காவல்துறையினர் கடத்தலை தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதன் காரணமாக இரவு பகலாக கனிமவள கொள்ளை தங்கு தடையின்றி முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அமராவதி பகுதியில் ஆய்வு செய்து கனிமவள கொள்ளையில் ஈடுபட்டு வருகின்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அதற்கு உறுதுணையாக செயல்பட்ட அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story