திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று தமிழ்நாடு வருகிறார் சோனியா காந்தி


திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று தமிழ்நாடு வருகிறார் சோனியா காந்தி
x
தினத்தந்தி 13 Oct 2023 6:39 AM GMT (Updated: 13 Oct 2023 6:45 AM GMT)

திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று தமிழ்நாடு வருகிறார்.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அவர் பிறந்த தினமான ஜூன் 3-ந்தேதி முதல் இந்த ஆண்டு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி தி.மு.க. சார்பிலும், அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் தி.மு.க.வின் ஒவ்வொரு அணிகளின் சார்பிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில் இப்போது தி.மு.க. மகளிரணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னையில் நாளை நடத்தப்படுகிறது. தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னின்று நடத்தும் இந்த 'மகளிர் உரிமை மாநாடு' நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை மாலை 4.30 மணிக்கு பிரமாண்டமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய மகளிர் தலைவர்களை பங்கேற்க செய்ய கனிமொழி எம்.பி. அழைப்பு அனுப்பி இருந்தார். அந்த அழைப்பை ஏற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான அவரது மகள் பிரியங்கா காந்தி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பெண் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி இருவரும் இன்றிரவு 10.40 மணிக்கு விமானம் மூலம் சென்னை வருகிறார்கள். அவர்கள் இருவரும் கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்கள். இதேபோல் மாநாட்டுக்கு வருகை தரும் மற்ற பெண் தலைவர்கள் அனைவருக்கும் அதே ஓட்டலில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகளை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் முன்னின்று கவனித்து வருகின்றனர்,


Next Story