பெண்கள் அனைவரும் கல்வி கற்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும் - சென்னை மேயர் பிரியா பேச்சு


பெண்கள் அனைவரும் கல்வி கற்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும் - சென்னை மேயர் பிரியா பேச்சு
x

பெண்கள் அனைவரும் கல்வி கற்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று விழா ஒன்றில் சென்னை மேயர் பிரியா பேசினார்.

சென்னை

இந்தியாவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவதை தடுத்திடவும், பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுவதை தடுப்பதற்கும், பெண் குழந்தைகள் அனைவரும் கல்வி பெற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரவும் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டிட வளாக கூட்டரங்கில் நடைபெற்ற பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்ட விழிப்புணர்வு முகாமில், மேயர் பிரியா கலந்து கொண்டு பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்கள், குடும்பநல கருத்தடை அறுவை சிகிச்சை செய்த தாய்மார்கள், வளரிளம் பெண்கள் ஆகியோரை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் பெண் குழந்தைகளை பெற்ற ஆயிரம் தாய்மார்கள், 2 பெண் குழந்தைகளை பெற்று குடும்பநல கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 500 தாய்மார்கள், 500 வளர் இளம்பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக, மருத்துவ சேவைகள் துறையின் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த பெண் குழந்தைகளின் பாதுகாப்பு திட்டம் குறித்த கண்காட்சியை மேயர் பார்வையிட்டார். தொடர்ந்து, மேயர் தலைமையில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் உறுதிமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

விழாவில் மேயர் பிரியா பேசியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மாநகராட்சிகளில் பெரிய மாநகராட்சியான பெருநகர சென்னை மாநகராட்சிக்கு என்னை மேயராக தேர்வு செய்த முதல்-அமைச்சருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பெண்கள் தனித்துவமான சிறப்பு வாய்ந்தவர்கள். ஒரு காலத்தில் பெண் குழந்தைகள் என்றால் கருவிலேயே அழித்து விடும் நிலை இருந்தது. இந்த நிலை மாறி தற்போது பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். எந்த கடினமான சூழ்நிலையாக இருந்தாலும் பெண் குழந்தைகளை காணும்போது அவை எல்லாம் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். பெண்கள் அனைவரும் கல்வி கற்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும். சிறந்த இலக்கை அடைய தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்கள் மற்றும் வளர் இளம்பெண்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் கமிஷனர் சங்கர்லால் குமாவத் உள்பட அரசு உயர் அதிகாரிகள், டாக்டர்கள், நர்சுகள், தாய்மார்கள், வளர் இளம்பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story