இரண்டாவது சனிக்கிழமை, முகூர்த்த நாட்களை முன்னிட்டுசேலம் கோட்டத்தில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சேலம்
இரண்டாவது சனிக்கிழமை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சிறப்பு பஸ்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சார்பில் திருவிழா, வார இறுதி விடுமுறை நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழக கோட்டம் சார்பில் நாளை (சனிக்கிழமை) முதல் 11-ந் தேதி வரை பல்வேறு முக்கிய நகரங்களுக்கு 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த சிறப்பு பஸ்கள் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரத்திற்கு இயக்கப்படுகின்றன. இதேபோல், சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி மற்றும் மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அமாவாசை
மேலும், வருகிற 14-ந் தேதி அமாவாசையை முன்னிட்டு சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சித்தர் கோவிலுக்கும், சேலம் புதிய பஸ் நிலையம், மேட்டூர் மற்றும் தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
எனவே பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து இந்த வசதியை பயன்படுத்தி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு சேலம் அரசு போக்குவரத்து கழக கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.






