தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள்
x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது.

விழுப்புரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் மண்டலத்தின் சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) மற்றும் 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து திண்டிவனம், புதுச்சேரி, விழுப்புரம், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு 190 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுதவிர பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் மண்டலத்தின் சார்பில் கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் எந்தெந்த ஊர்களுக்கு புறப்படும் என்ற தகவலை விளம்பர பதாகை மூலமாக பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விழுப்புரம் மண்டலத்தை சேர்ந்த விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, புதுச்சேரி, கோயம்பேடு ஆகிய பஸ் நிலையங்களிலும் விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது.

27-ந் தேதி வரை

தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, செஞ்சி, வந்தவாசி, சேத்பட், போளூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கும், கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திருக்கோவிலூர், திட்டக்குடி, திருச்சி, சேலம் போன்ற பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதேபோல் தீபாவளி பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்பும் வகையில் பொதுமக்களுக்காக வருகிற 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த தகவலை விழுப்புரம் மண்டல பொது மேலாளர் செல்வமணி தெரிவித்துள்ளார்.


Next Story