கிராம மக்கள் வங்கி கடன் பெற சிறப்பு முகாம்- 3-ந் தேதி நடக்கிறது


கிராம மக்கள் வங்கி கடன் பெற சிறப்பு முகாம்- 3-ந் தேதி நடக்கிறது
x

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் வங்கி கடன் பெற “சிறப்பு வங்கி மேளா” முகாம் வருகிற 3-ந் தேதி நடைபெற இருப்பதாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டில் தெர்வு செய்யப்பட்டுள்ள 80 கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களில் வசிக்கும் கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் வங்கித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் தெரிந்துகொண்டு பயன்பெற ஏதுவாக 15 நாட்களுக்கு ஒரு முறை அனைத்து வட்டாரங்களிலும் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து மூன்று மாதங்களுக்குள் 80 கிராமங்களிலும் "சிறப்பு வங்கி மேளா" முகாம் நடத்த வேண்டும் என முதன்மை வங்கி மேலாளருக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக வங்கித் துறையின் மூலம் 12-01-2023 அன்று 13 கிராமங்களில் "சிறப்பு வங்கி மேளா" நடத்தப்பட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது 2-ம் கட்டமாக 03-02-2023 (வெள்ளிக்கிழமை) அன்று வடமதுரை, சித்தராஜகண்டிகை, கூவம், மேலூர், கொடிவலசா, காட்டுப்பாக்கம், பட்டரைப்பெரும்புதூர், அம்மையார்குப்பம், ஞாயிறு, அலமேலுமங்காபுரம், வீரராகவபுரம், புட்லூர், 26 வேப்பம்பட்டு மற்றும் வானகரம் ஆகிய 14 கிராமங்களில் வங்கித் துறைகளுடன் வேளாண்மை உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உள்பட பல்வேறு துறைகள் இணைந்து "சிறப்பு வங்கி மேளா" மேற்படி கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

எனவே மேற்குறிப்பிடப்பட்ட கிராமங்களில் 03-02-2023 அன்று நடைபெற உள்ள "சிறப்பு வங்கி மேளா" முகாமில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தவறாமல் கலந்து கொண்டு புதிய வங்கிக்கணக்கு தொடங்கவும், இன்சூரன்ஸ் பதியவும், வங்கிக் கடன், கல்விக் கடன், பயிர்க்கடன், கிசான் கிரெடிட் கார்டு, சுயதொழில் கடன், வேலைவாய்ப்பு கடன், கால்நடை பராமரிப்புக்கடன், வேளாண் எந்திரங்கள் கடன், வேளாண் உட்கட்டமைப்பு நிதிக்கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், மற்றும் இதர வங்கி கடன்களை பெறுவதற்கும் தேவையான விண்ணப்பங்களை பெற்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story