கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்


கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 20 Oct 2023 8:15 PM GMT (Updated: 20 Oct 2023 8:16 PM GMT)

கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்.

நீலகிரி


கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்.


மருத்துவ முகாம்


நீலகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வள்ளுவர் நகர் கால்நடை மருந்தக வளாகத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் அருணா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.


முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், ஆண்மை நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், மலடு நீக்க சிகிச்சை செய்தல், சினை பரிசோதனை செய்தல், சிறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளுதல், தாது உப்பு கலவை வழங்குதல், கால்நடைகளுக்கான சிறு கண்காட்சி அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்றது.


கண்காட்சி


இந்த முகாமில் சிறந்த கிடாரி கன்றுகளுக்கான பரிசுகளை, அதன் உரிமையாளர்கள் 3 பேருக்கும், கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான பரிசுகளை 3 பேருக்கும் கலெக்டர் வழங்கி பாராட்டினார். முன்னதாக முகாமில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை கலெக்டர் அருணா பார்வையிட்டார்.


இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பகவத்சிங் கூறுகையில், இந்த முகாம் வருகிற மார்ச் மாதம் வரை மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது. ஒரு தாலுகாவுக்கு 20 இடங்கள் என 80 இடங்களில் நடக்கிறது. இதில் விவசாயிகள் தங்களது கால்நடைகளுடன் கலந்துகொண்டு பயன் பெறலாம் என்றார்.


முகாமில் முதன்மை நோய் நிகழ்வியல் அலுவலர் சத்திய நாராயணன், ஆர்.டி.ஓ.மகராஜ், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர்கள் பார்த்தசாரதி, நீலவண்ணன், பேராசிரியர் பிரேமா, கால்நடை உதவி மருத்துவர்கள் நாகஜோதி, ராஜமுரளி, பொன்கலைவாணி, தன்ராஜ், கணேஷ், சோலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஹர்ஷத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



Next Story