திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் 28, 29ம் தேதிகளில் சிறப்பு ரெயில்கள் இயக்கம்


திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் 28, 29ம் தேதிகளில் சிறப்பு ரெயில்கள் இயக்கம்
x
தினத்தந்தி 26 Oct 2023 11:10 AM GMT (Updated: 26 Oct 2023 11:53 AM GMT)

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் 28, 29ம் தேதிகளில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

அவ்வாறு வரும் பக்தர்கள் இங்குள்ள மகாதீபமலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். மேலும் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.

அதன்படி, ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் வருகிற சனிக்கிழமை நடைபெற உள்ளது. பவுர்ணமியையொட்டி அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டும், விரைந்து தரிசனம் செய்வதற்கும் ஏதுவாக 2 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் பவுர்ணமி தினத்தன்று எந்தவித தரிசனத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் 28, 29ம் தேதிகளில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, வரும் 28ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு ரெயில் புறப்படுகிறது. அடுத்த நாள் மறுமார்க்கமாக இந்த ரெயில் சென்னைக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story