பொதுப்பிரிவினருக்கான விளையாட்டு போட்டிகள்
![பொதுப்பிரிவினருக்கான விளையாட்டு போட்டிகள் பொதுப்பிரிவினருக்கான விளையாட்டு போட்டிகள்](https://media.dailythanthi.com/h-upload/2023/02/23/1156726-1496972-dsc2260.webp)
பெரம்பலூர் மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான பொதுப்பிரிவினருக்கான விளையாட்டு போட்டிகள்நேற்று நடந்தது.
தடகளம்-கபடி, இறகுப்பந்து
பெரம்பலூர் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பொதுப்பிரிவினருக்கான போட்டிகள் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கத்தில் நேற்று நடந்தது. பொது பிரிவில் ஆண்கள், பெண்களுக்கு தடகள போட்டிகள், கபடி, இறகுப்பந்து ஆகிய போட்டிகளும் தனித்தனியாக நடந்தது. மேலும் பொதுப்பிரிவில் ஆண்களுக்கான சிலம்பம், வாலிபால் போட்டிகளும் நடந்தது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
பரிசுத்தொகை
போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு முதல் பரிசு தலா ரூ.3 ஆயிரமும், 2-ம் பரிசாக தலா ரூ.2 ஆயிரமும், 3-ம் பரிசாக தலா ரூ.ஆயிரமும் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவிலான முதல் இடம் பிடித்த வீரர்-வீராங்கனைகளும், குழுப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும் வருகிற மே மாதத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் அரசு செலவில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.