கடலூரில்விடுதியில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்


கடலூரில்விடுதியில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 24 May 2023 6:45 PM GMT (Updated: 24 May 2023 6:46 PM GMT)

கடலூரில் விடுதியில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் 2நாட்கள் நடைபெற உள்ளது.

கடலூர்

கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் விளையாட்டுத்துறையில் சாதனை படைப்பதற்கு ஏற்ப பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படுகின்றன. அதன்படி தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கையுந்து பந்து, பளுதூக்குதல், வாள்வீச்சு, ஆக்கி, ஜூடோ உள்ளிட்ட போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகள் சிறப்பு விளையாட்டு விடுதியில் நடப்பு கல்வியாண்டில் தங்கி படிக்க விளையாட்டு போட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் விடுதிகளில் சேர்வதற்கு 1-1-2023 அன்றைய தேதியின்படி 17 வயது நிரம்பிய 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, கல்லூரியில் இளநிலை மற்றும் முதுகலை பயிலும் மாணவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். இந்த நிலையில் சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ-மாணவிகளுக்கான மாநில அளவிலான போட்டிகள் நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) மற்றும் 28-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க கடலூர் மாவட்ட அணிக்கு வீரர்கள் தேர்வு நேற்று கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா தொடங்கி வைத்தார்.

இதையடுத்து டேக்வாண்டோ, தடகளம் உள்ளிட்ட போட்டிகள் தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் வெற்றி பெறுபவர்களுக்கே சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர அனுமதி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story