ஒரகடம் அருகே வாகனம் மோதி புள்ளிமான் சாவு; பொதுமக்கள் சாலைமறியல்


ஒரகடம் அருகே வாகனம் மோதி புள்ளிமான் சாவு; பொதுமக்கள் சாலைமறியல்
x

ஒரகடம் அருகே வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது. வனத்துறையினரின் அலட்சியத்தால்தான் புள்ளிமான் உயிரிழந்தது என ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம்

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புள்ளிமான் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் புள்ளிமான் மீது மோதிவிட்டு சென்றது. அப்போது இளைஞர்கள் சிலர் சுற்றுலா சென்று விட்டு வாகனத்தில் அந்த வழியாக வந்து கொண்டிருந்தனர். சாலையில் படுகாயத்துடன் புள்ளிமான் துடித்துகொண்டிருப்பதை பார்த்த அவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பொதுமக்கள் சிலரும் அங்கே கூடினர். இதற்கிடையே புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது. வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு உரிய நேரத்தில் வராததால்தான் புள்ளிமான் உயிரிழந்துள்ளது. வனத்துறையினரின் அலட்சியத்தால்தான் புள்ளிமான் உயிரிழந்தது என ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனப்பகுதியில் வாகனங்கள் மெதுவாக செல்ல எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியை ஒட்டி வேலி அமைக்க வேண்டும் என்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அங்கு இருந்தவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story