இன்று தொடங்குகிறது எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி


இன்று தொடங்குகிறது எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி
x

கோப்புப்படம்

விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான வழிகாட்டுதல்கள் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ல் தொடங்கி 22-ம் தேதி வரையும், பிளஸ் 1 பொதுத் தேர்வுமார்ச் 4-ல் தொடங்கி 25-ம் தேதி வரையும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி கடந்த 8-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இத்தேர்வை சுமார் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். விடைத்தாள்கள், மண்டல அளவிலான சேகரிப்பு மையங்களில் பாதுகாக்கப்பட்டன.

இந்நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகின்றன. விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான வழிகாட்டுதல்களும் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அரசு தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் கூறுகையில், 'எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, தமிழகம் முழுவதும் 88 மையங்களில் நடைபெறுகிறது. விடைத்தாள்கள் அடுத்த 8 வேலை நாட்களில் நிறைவு செய்ய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 10-ந்தேதி வெளியாகும்.

விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி கவனத்துடன் செயல்பட வேண்டும். தமிழ் வழிமற்றும் ஆங்கில வழி விடைத்தாள்களை அதற்குரிய ஆசிரியர்கள் மட்டுமே திருத்த வேண்டும்' என்று தெரிவித்தனர்.


Next Story