'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' திட்டம்: மாவட்டங்களில் அரசு திட்ட செயல்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


கள ஆய்வில் முதல்-அமைச்சர்  திட்டம்:  மாவட்டங்களில் அரசு திட்ட செயல்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

மாவட்டங்களில் அரசு திட்டங்களை நேரில் ஆய்வு செய்ய ‘கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 1-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டில்2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைக் கைப்பற்றியது.

மக்கள் நலத்திட்டங்களில் ஆர்வம்

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற நாளில் இருந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக அரசு அலுவலகங்கள், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வருகிற பொதுமக்களை அலைக்கழிக்காமல், அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரும்புகிறார்.

இதுபற்றி அவர் ஏற்கனவே கருத்து தெரிவிக்கையில், ''அரசு அலுவலகங்கள், ஆஸ்பத்திரிகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக உள்ள ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்'' என குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் அவர் கள ஆய்வுகளின் முக்கியத்துவத்தை பல்வேறு அரசுத் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டங்களிலும் வலியுறுத்தி வந்துள்ளார்.

'கள ஆய்வில் முதல்-அமைச்சர்'

இப்போது அதற்கு செயல்வடிவம் கொடுக்கிற வகையில், 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 1-ந் தேதி அறிமுகப்படுத்துகிறார்.இந்தத் திட்டத்தின் கீழ், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் மாவட்டங்களுக்கு நேரில் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.

முதல் கட்டமாக4 மாவட்டங்கள்

முதல் கட்டமாக வரும் பிப்ரவரி 1 மற்றும் 2-ந் தேதிகளில் அவர் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து நேரில் விரிவாக ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.அப்போது, குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த்துறை வழங்கக்கூடிய சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக்கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறை சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்தும் ஆய்வு செய்கிறார்.

சட்டம்-ஒழுங்கு

கள ஆய்வின் முதல் நாளான பிப்ரவரி 1-ந் தேதியன்று அப்பகுதிகளில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழில் அமைப்புகளின் கருத்துகளையும், கோரிக்கைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிகிறார். அன்று மாலை, 4 மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்கள், டி.ஐ.ஜி., ஐ.ஜி. (வடக்கு) ஆகியோருடன் அந்த மாவட்டங்களின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்தும் முதல்-அமைச்சர் விசாரித்து அறிவதுடன், கள ஆய்வும் மேற்கொள்வார்.

அதே நாளில் இந்த ஆய்வின் மற்றொரு பகுதியாக, அமைச்சர்கள், வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் முக்கியத் துறைகளைச் சார்ந்த அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் ஆகியோர் அந்த 4 மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்வார்கள்.

கலெக்டர்களுடன் ஆய்வு

கள ஆய்வில் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், திட்டச் செயல்பாடுகள் குறித்து பிப்ரவரி 2-ந் தேதி நடைபெறும் மாவட்ட கலெக்டர்கள் பங்குபெறும் ஆய்வுக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் முன்னிலையில் விவாதிக்கப்படுகிறது. இந்த கள ஆய்வுக்கூட்டத்தில் அரசு தலைமைச் செயலாளர், முக்கிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைத் தலைவர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட மாவட்ட உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விரிவான ஆய்வை மேற்கொள்வார்.

இந்த தகவல்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளன.


Next Story