வருகிற 11-ந் தேதி முதல் நெல்லை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம்


வருகிற 11-ந் தேதி முதல் நெல்லை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம்
x

வருகிற 11-ந் தேதி முதல் நெல்லை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதாக தென்னக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

கொரோனா பாதிப்புக்கு முன்பு நெல்லையில் இருந்து ஈரோடு வரை பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த பயணிகள் ரெயில் விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வணிகர்களுக்கு பெரும் வசதியாக இருந்து வந்தது. மேலும் மயிலாடுதுறை செல்வதற்கும் இதன் இணைப்பு ரெயில் பயனுள்ளதாக இருந்து வந்தது. கடந்த மார்ச் 2020-ல் கொரோனா பாதிப்பின் போது இந்த பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் முழுமையாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு ரெயில்கள் இயக்கப்படும் நிலையில் இந்த ரெயில் மட்டும் இயக்கப்படாமல் தென்னக ரெயில்வே நிர்வாகம் தயக்கம் காட்டியது. இதுதொடர்பாக தென்மாவட்ட மக்களும், எம்.பி.க்களும் வலியுறுத்தி வந்தனர்.

தற்போது தென்னக ரெயில்வே நிர்வாகம் இந்த ரெயிலை எக்ஸ்பிரஸ் ரெயிலாக வருகிற 11-ந் தேதி முதல் இயக்க முடிவு செய்து அறிவித்துள்ளது.

அதன்படி ஜூலை 11-ந் தேதி ரெயில் (எண் 16845) ஈரோட்டில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. விருதுநகருக்கு மாலை 6.43 மணிக்கு வந்து 6.45 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. இதேபோன்று 12-ந் தேதி ரெயில் (எண் 16846) நெல்லையிலிருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டிற்கு மதியம் 2.30 மணிக்கு சென்றடைகிறது.

இந்த ரெயில் விருதுநகருக்கு காலை 8.13 மணிக்கு வந்து 8.15 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. பயணிகள் ரெயிலாக இயக்கப்பட்டு வந்த இந்த ரெயில் தற்போது எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்கப்படுகிறது.


Next Story