அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையை எல்லோரும் அறியும்படி வெளியிட வேண்டும்


அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையை எல்லோரும் அறியும்படி வெளியிட வேண்டும்
x

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை எல்லோரும் அறியும்படி வெளியிட வேண்டும் என அந்த சம்பவத்தில் பலியான மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்தார்.

மதுரை


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை எல்லோரும் அறியும்படி வெளியிட வேண்டும் என அந்த சம்பவத்தில் பலியான மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலினின் தாயார் வனிதா மற்றும் தமிழ் மீனவர் கூட்டமைப்பின் தலைவர் வக்கீல் ரஜினி ஆகியோர் நேற்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அதில் வனிதா கூறியதாவது:-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களில் 14 பேரை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கையில் பல போலீசார் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இனி இதுபோன்ற செயல்கள் நடைபெறாத வகையில் தமிழக அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். என் மகளை இழந்து எங்கள் குடும்பத்தினர் நித்தமும் ரத்தக்கண்ணீர் வடிக்கிறோம்.

வெளியிட வேண்டும்

தமிழக அரசு, நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையை பொதுமக்கள் அறியும் வகையில் வெளிப்படையாக வெளியிட வேண்டும். துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அ.தி.மு.க. அரசிடம் முறையிட்டோம் ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி எங்களை நேரில் சந்தி்த்தார். துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான அனைவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

நடவடிக்கை

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். எத்தனை கோடி இழப்பீடு கொடுத்தாலும் அது ஈடுசெய்ய இயலாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அறிவித்த நிதி இதுவரை முறையாக வந்து சேரவில்லை. 14 பேர் உயிர் போனதோடு மட்டுமல்லாமல், இந்த சம்பவத்தின்போது உடல் உறுப்புகளை இழந்து இன்றளவிற்கும் மாற்றுத்திறனாளிகளாக துடிக்கும் நபர்களுக்கும் போதிய உதவி கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ் மீனவர் கூட்டமைப்பு

தமிழ் மீனவர் கூட்டமைப்பு தலைவர் வக்கீல் ரஜினி கூறியதாவது:- தமிழக சட்டப்பேரவையில் அருணா ஜெகதீசன் அறிக்கையையும், அந்த அறிக்கை மீதான நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கை கசிந்தது தொடர்பாக அரசு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கண்டிக்கிறோம். முறையாக விசாரணை நடத்திய அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை குழுவிற்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம். துப்பாக்கி சூட்டிற்கு ஆதரவாக பேசி திசை திருப்பிய நடிகர் ரஜினிகாந்தையும் கண்டிக்கிறோம். அருணா ஜெகதீசன் அறிக்கையில் பயங்கரவாத ஊடுருவல் எதுவும் இல்லை என கூறியுள்ளார். எனவே நடிகர் ரஜினிகாந்த் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story