புயல் எதிரொலி: 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை


புயல் எதிரொலி: 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை
x
தினத்தந்தி 3 Dec 2023 8:24 AM GMT (Updated: 3 Dec 2023 9:26 AM GMT)

மிக்ஜம்' புயல் எதிரொலியாக 3 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது.

'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் சார்பில் அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புயல் எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. பால், குடிநீர், மருத்துவமனை, மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள், உணவகம் உள்ளிட்டவை நாளை வழக்கம்போல் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story