வங்க கடலில் புயல் சின்னம்- தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தல்


வங்க கடலில் புயல் சின்னம்- தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 1 Dec 2023 6:10 PM GMT (Updated: 2 Dec 2023 1:18 AM GMT)

பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சென்னை,

வங்க கடல் பகுதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) புயல் சின்னம் உருவாக உள்ளதை தொடர்ந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மாவட்ட கலெக்டர்கள் மற்றும் முக்கிய துறை அலுவலர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

கனமழை மற்றும் புயலால் பாதிப்புக்கு உள்ளாக கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முன் கூட்டியே நிவாரண மையங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பலத்த காற்றின் காரணமாக விழும் மரங்களை உடனடியாக அகற்ற போதுமான எந்திர மர அறுப்பான் மற்றும் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும், மெட்ரோ ரெயில், பெருநகர சென்னை மாநராட்சி, சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் மூலம் தோண்டப்படும் குழிகளுக்கு தடுப்பு ஏற்படுத்தி விபத்துகள் நிகழ்வதை தவிர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை தலைமை செயலாளர் வழங்கினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், டி.ஜி.பி. சங்கர் ஜிவால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் ராஜாராமன், பேரிடர் மேலாண்மை இயக்குநர் ராமன், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story