தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை - கல்வித்துறை எச்சரிக்கை


தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை - கல்வித்துறை எச்சரிக்கை
x

கள்ளக்குறிச்சியில் பள்ளி சூறையாடப்பட்டதை கண்டித்து தனியார் பள்ளிகள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்துவந்த 12-ம் வகுப்பு மாணவி விடுதியில் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய பெற்றோருக்கு, பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பள்ளி முன்பு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து சூறையாடினர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு செயலாளர் நந்தகுமார் கூறியிருப்பதாவது,

இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சமூக விரோதிகள் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி பள்ளிக்குள் புகுந்து பள்ளி வாகனங்களை தீக்கிரையாக்கி இருக்கிறார்கள். ஏறக்குறைய பள்ளிக்கு ரூ.50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனை கண்டித்து நாளை முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் தனியார் பள்ளிகள் ஈடுபட உள்ளது. பள்ளிகள் நடக்காது, என்று கூறினார்.

இந்த நிலையில் தனியார் பள்ளிகள் இதுபோல் விடுமுறை விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்க அதிகாரிகள் கூறும்போது,

'உள்ளூர் விடுமுறை விடும் அதிகாரம் மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இருவருக்கு மட்டுமே உள்ளது. பேரிடர் காலங்கள், ஊர் திருவிழாக்கள் போன்றவற்றை முன்னிட்டு இந்த உள்ளூர் விடுமுறைகள் விடப்படுவது வழக்கம்.

ஆனால் தனியார் பள்ளிகள் சங்கங்கள் தாங்களாகவே பள்ளிகளுக்கு விடுமுறை விட்டுக்கொள்வது சட்ட விதிமுறையை மீறும் செயலாகும். நாளை தனியார் பள்ளிகள் தாங்களாகவே விடுமுறை விட்டுக்கொண்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சட்டவிதிமுறைப்படி நடவடிக்கை எடுப்பார்கள்' என்றனர்.


Next Story