மாணவர்கள் சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்


மாணவர்கள் சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
x

ஆதிதிராவிடர்-பழங்குடியின மாணவர்கள் சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்

பொது நுழைவு தேர்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு படிப்பதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியினை பெற 18 முதல் 25 வயது நிரம்பிய 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மற்றும் நடப்பாண்டில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வழியாகவும், தேர்வு நடைபெறும் முறை நேரிடையாகவும் நடைபெறும்.

விண்ணப்பிக்கலாம்

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சட்டப்படிப்பு படிப்பதற்கு ஏனைய நுழைவு தேர்வுகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படும். பொது நுழைவு தேர்வுக்கான சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சி வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட தேர்வுகளான நேர்காணல், குழு விவாதம், எழுத்துத்தேர்வு ஆகியவற்றிற்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்த தேர்விற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும். மேற்கண்ட தகவலை கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story