தேசிய கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


தேசிய கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
x

கரூர் மாவட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்

கல்வி உதவித்தொகை

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 9 மற்றும் 11-ம் வகுப்பு பயின்று வரும் 3,093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள், தேசியத் தேர்வு முகமையால் கடந்த செப்டம்பர் மாதம் 29-ந்தேதி நடத்தப்பட இருந்த யாசஸ்வி நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த எழுத்துத் தேர்வானது காலப்பற்றாமை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசால் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பயனாளிகள் தேர்வு

மேலும் 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனவும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகையானது வழங்கப்படும் எனவும் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட National Scholarship Portal (https://Scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (https://Socialjustice.gov.in) தொடர்ந்து கவனித்து கல்வி உதவித்தொகை பயன்களை பெறலாம். என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.


Next Story